மதுரை: தமிழக அரசின் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சொத்து வரியை 50% ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் அரசாணை பிறப்பித்துள்ளது. 1998ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டுக்குப் பிறகு சொத்து வரி உயர்த்தப்படாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது. இது குறித்த ஒரு வழக்கு விசாரணையில் தமிழக அரசு முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், சொத்து வரியை உயர்த்துமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து சொத்து வரியை உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையின்படி, உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் இதுவரை சொத்து வரி 50% ல் இருந்து, இனி 100% ஆக உயர்த்தப்படும். மேலும், குடியிருப்புகளுக்கு 50% ம், வாடகை குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகள் அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமல் சொத்து வரி விதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக அரசின் இந்த முடிவின் காரணமாக வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்களுக்கு கூடுதல் வாடகைச் சுமை ஏற்படும். எனவே தமிழக அரசின் இந்த சொத்துவரி உயர்வு தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகத் தெரிகிறது.