சென்னை: மூளையின் இரு பக்கங்களும் சிறப்பாகச் செயல்படும் ஓர் மனிதர் கருணாநிதி மட்டும்தான் என்று பிரபல நரம்பியல் நிபுணரான ராமமூர்த்தி வியப்புடன் ஒரு முறை தெரிவித்திருக்கிறார்.
பொதுவாக மனிதனின் மூளையின் செயல்பாடுகள் என்பது மூளையின் இடது மற்றும் வலது என இரண்டு பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது வழக்கம். மனித உடலின் குறிப்பிட்ட சில செயல்பாடுகள் மூளையின் இடது பக்கத்தாலும், வேறு சில செயல்பாடுகள் மூளையின் வலது பக்கத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவற்றை பொறுத்தே நமது திறமைகளும் அமைக்கின்றன
கருணாநிதியினைப் பொறுத்தவரை சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள், திரைக்கதை, வசனங்கள், பாடல்கள் மற்றும் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை. இவை அனைத்தையும் அவர் ஆட்சி பொறுப்பில் இருக்கும் போதும் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது..
இதுதொடர்பாக பிரபல நரம்பியல் நிபுணரான ராமமூர்த்தி ஒருமுறை கூறியதாவது:
ஆளும் திறமை என்பது இடது மூளை தொடர்பானது. அதேசமயம் காவியமும் கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும்.ஆனால் இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது என்பது கலைஞருக்குத்தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இப்படி மருத்துவர்களும் வியக்கும் வண்னம் ஒரு அதீத திறமையோடு விளங்கியவர் திமுக தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.