குற்றாலம் சாரல் திருவிழாவின் 3-ம் நாளான திங்கள்கிழமை படகு மற்றும் யோகா போட்டிகள் நடைபெற்றன.
குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் அமைந்துள்ள வெண்ணைமடைகுளத்தில் நடைபெற்ற படகுப் போட்டியை மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில், குற்றாலத்தைச் சேர்ந்த செந்தில், அருண்குமார் அணியினர் முதலிடத்தையும், மணிகண்டன், ஸ்ரீதர் அணியினர் இரண்டாமிடத்தையும், ராஜபாளையத்தைச் சேர்ந்த முனீஸ்வரன், கருப்பசாமி அணியினர் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் யோகா போட்டிகள் நடைபெற்றன. 5 வயது முதல் 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியில் முத்துச்செல்வம், சுபாஷ் சந்திரபோஸ், ராகவேந்திரா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். பெண்களுக்கான போட்டியில் மீனாட்சி முதல் பரிசு பெற்றார்.
பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் தலைமை வகித்தார். குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் கனகராஜ் முன்னிலை வகித்தார். குற்றாலம் வனச்சரக அலுவலர் ஆரோக்கியசாமி, வனவர் செந்தில்குமார் ஆகியோர் படகு மற்றும் யோகா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினர்.
விழாவில், தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணியாதவா கல்வி நிறுவனங்களின் தாளாளர் என். மணிமாறன், கல்லூரி முதல்வர் கயற்கன்னி, மாவட்ட யோகாசன சங்கச் செயலர் அழகேசராஜா, மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் கர்ணன், படகுகுழாம் மேலாளர் அசோகன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக செய்திமக்கள் தொடர்புத் துறை உதவி அலுவலர் மகாகிருஷ்ணன் வரவேற்றார்.