இரண்டு வாரங்களுக்கு பிறகு பண்ணவாடி, கோட்டையூர் பரிசல் துறைகளில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி கடந்த இரு வாரங்களுக்கு முன் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பண்ணவாடியிலிருந்து நாகமரை, கோட்டையூரிலிருந்து ஒட்டனூர், செட்டிப்பட்டியிலிருந்து ஏமனூர் செல்லும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், கடந்த இரண்டு வாரங்களாக சேலம் மாவட்டம், மேட்டூர், கொளத்தூர் பகுதிகளிலிருந்து தருமபுரி மாவட்டம் ஏமனூர், ஒட்டனூர், நாகமரை, நெருப்பூர், ஏரியூர் பகுதிகளுக்குச் சென்று வந்த பொதுமக்களும், வியாபாரிகளும் மாணவ, மாணவியரும் அந்தப் பகுதியிலிருந்து மேட்டூர், கொளத்தூர் வந்து சென்றவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.
தற்போது மேட்டூர்அணை நிரம்பி நீர் வரத்தும் குறைந்துள்ளதால், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க பரிசல் போக்குவரத்து திங்கள்கிழமை காலை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்குப் பிறகு பரிசல் போக்குவரத்து தொடங்கப்பட்டதால், பெதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.