தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புவார்கள் தயங்காமல் விசாரணை ஆணையத்திற்கு வருமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் தகவல், தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தில் காவல்துறையால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
தனது விசாரணையின் முதல்கட்டமாக திங்களன்று நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி வந்தடைந்தார். அங்கு அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து தனியாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கேயே மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புவார்கள் தயங்காமல் விசாரணை ஆணையத்திற்கு வருமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் தகவல், தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விபரம் வருமாறு:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேரடியாகவோ மறைமுகமாவோ விபரம் அறிந்தவர்களோ அல்லது தங்களிடம் தகவல் உள்ளவர்களோ ஆணையத்தை அணுகலாம். அணுகி நீங்கள் தெரிவிக்க விரும்பும் தகவல்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம்.
இதற்காக விசாரணை ஆணையத்தின் தலைமை அலுவலகமானது சென்னை க்ரீன்வேஸ் அலுவலகத்தில் அமைந்துள்ளது. அத்துடன் இங்கேயும் தூத்துக்குடி பழைய சர்க்யூட் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தில் பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்பவர்கள் தங்கள் மேலே குறிப்பிட்ட இரண்டு இடங்களில் எங்கு விசாரிக்கப்பட விரும்புகிறார்கள் என்பதனையும் தவறாமல் தெரிவிக்க வேண்டும். வரும் ஜுன் 28-ஆம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு இறுதி நாளாகும்.
ஆணையத்தின் இரண்டு அலுவலகங்களிலும் இதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே பொதுமக்கள் தயங்காமல், யாருக்கும் அச்சப்படாமல் முன்வந்து தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அதுபோக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் தங்கள் வசமுள்ள விடியோ பதிவுகளின் வெட்டப்படாத பகுதிகளை முன்வந்து ஆணையத்தின் வசம் ஒப்படைக்கலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆணையத்தில் தகவல் தர விரும்பினால், அங்கேயே அல்லது அவர்கள் விரும்பும் வேறு எதோ ஒரு இடத்திலோ விசாரணை ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு கிடைக்கும் தகவல்களைக் கொண்டு ஆணையம் நியாயமாக விசாரணை நடத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் மாவட்ட தலைமை மருத்துவமனை செல்லும் அவர் அங்கு காயம்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து விசாரணை நடத்துவார் என்று அறிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்குள் அவரது விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படுமென்று தெரிகிறது.