சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக துக்ளக் முன்னாள் ஆசிரியா் சோவின் மகன் ஸ்ரீராம், பத்திரிகையாளர் மருது அழகுராஜ் ஆகியோரிடம் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை ஆணையத்தில் சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். மேலும், அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்கள், பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய சசிகலா தரப்பு வழக்குரைஞர்களுக்கு நீதிபதி ஆறுமுகசாமி அனுமதி அளித்தார்.
அதன்படி, இதுவரை 10-க்கும் மேற்பட்டோரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து துக்ளக் முன்னாள் ஆசிரியர் சோவின் மகன் ஸ்ரீராம், பத்திரிகையாளர் மருது அழகுராஜ் ஆகியோரிடம் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.