மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்தியக் கலந்தாய்வுக்குப் பதிவு செய்யும் நடைமுறைகள் வரும் புதன்கிழமை (ஜூன்13) முதல் தொடங்க உள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய மருத்துவப் பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் 2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளது.
பதிவு தொடக்கம்: அதன்படி, வரும் புதன்கிழமை (ஜூன் 13) முதல் கட்ட கலந்தாய்வுக்கான பதிவு செய்யும் நடைமுறைகள் தொடங்குகின்றன. 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஜூன் 20, 21-ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். அதன் முடிவுகள் ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைமுறைகள் ஜூலை 6-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன.
கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் விவரங்களுக்கு mcc.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.