சீசன் முடியும் முன்பே வெறிச்சோடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் ஏரியில் நீர் இல்லாததாலும், போதிய பறவைகள் இல்லாததாலும், சீசன் முடியும் முன்பே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் போதிய பறவைகளின்றி வெறிச்சோடிக் காணப்படும் மரங்கள்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் போதிய பறவைகளின்றி வெறிச்சோடிக் காணப்படும் மரங்கள்.

வேடந்தாங்கல் ஏரியில் நீர் இல்லாததாலும், போதிய பறவைகள் இல்லாததாலும், சீசன் முடியும் முன்பே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்து செல்கின்றனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியாகத் திகழ்வது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் கண்டுகளிக்கும் இடமாக இந்தச் சரணாலயம் விளங்கி வருகிறது. 
ஏரிகள் நிறைந்த மாவட்டமாகத் திகழும் காஞ்சிபுரத்தின் முக்கிய ஏரியாக வேடந்தாங்கல் ஏரி உள்ளது. 
இந்த பறவைகள் சரணாலயம் கடந்த 1858ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்டது வேடந்தாங்கல் ஏரி. ஏரியின் நடுவே 50க்கும் மேற்பட்ட கருவேல மரங்கள், கடம்ப மரங்கள், செடி-கொடிகள் ஆகியவை உள்ளன. அந்த மரங்களின் மேல் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்வதற்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும் பறவைகள் வருகின்றன. 
இனப்பெருக்கத்துக்கு சாதகமான பருவநிலை, நீர், உணவு, மர்கள், பாதுகாப்பான சூழ்நிலை போன்ற காரணங்களால் பறவைகள் இங்கு வருகின்றன. வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றி மதுராந்தகம் ஏரி, வேடவாக்கம் ஏரி, கருங்குழி ஏரி உள்ளிட்ட ஏரிகள் அரணாக அமைந்துள்ளன.
சைபீரியா, இலங்கை, மத்திய ஆசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், மங்கோலியா, வங்கதேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்தும், ந் நாட்டின் வடமாநிலங்களில் இருந்தும் பறவைகள் பல்லாயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி இங்கு வந்து தங்கிச் செல்கின்றன. 
சிறிய நீர்க்காகம், பாம்புதாரா, கரண்டி வாயன், நத்தைகுத்தி நாரை, சாம்பல் நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கூழைக்கடா, வெள்ளைக் கொக்கு, உண்ணிக் கொக்கு, வக்கா, சீரவி, புள்ளி வாத்து, நாராயணபட்சி, குருட்டுக் கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை போன்ற பறவைகள் இந்தச் சரணாலயத்தை அலங்கரித்து வருகின்றன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பிளாக் பிக்டன், யுரேசியன் விஜின் உள்ளிட்ட பறவைகள் புதிய வரவாக வந்திருந்தன.
இந்த ஏரியை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருப்பதால், விளை நிலங்களில் பயிரிடப்படும் நெல், பருப்பு வகைகள் போன்றவற்றாலும், நீர்நிலைகளில் வாழும் மீன், புழு பூச்சிகள் ஆகியவற்றாலும் சரணாலயத்தில் முகாமிடும் பறவைகளுக்கு உணவுப் பஞ்சம் இருக்காது.
ஏரி நீரில் விழும் இப்பறவைகளில் எச்சம் மிகச்சிறந்த உரமாகப் பயன்படுவதால், வேடந்தாங்கல் பாசன விவசாயிகள் நல்ல விளைச்சலை பெறுகின்றனர். அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் சீசன் ஆகும். 
இது தொடர்பாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய வனச்சரகர் சுப்பையா தினமணி செய்தியாளிடம் கூறியது: 
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 16-இல் இங்கு சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது. 
தொடர்ந்து இங்கு கடந்த மே 31ஆம் தேதி வரை 1 லட்சத்து 16 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்து பறவைகளைக் கண்டுகளித்தனர். 
அவர்களிடம் இருந்து நுழைவுக் கட்டணம் வாயிலாகவும், கேமரா, டெலஸ்கோப், விடியோ கேமரா போன்றவற்றைப் பயன்படுத்தியதற்கான கட்டணம் வாயிலாகவும் மொத்தம் 12 லட்சத்து 52 ஆயிரத்து 26 ரூபாயை வனத்துறையினர் வசூலித்துள்ளனர். 
இந்த சீசனில் தற்போது சுமார் 3 ஆயிரம் பறவைகள்தான் உள்ளன. அவை அனைத்தும் எந்த நேரத்திலும் வெளியேறக் கூடும். 
பறவைகளின் வருகை மற்றும் அவை தங்குவது பற்றிய எதிர்பார்ப்பை ஏமாற்றும் வகையில் இந்த ஆண்டு சீசன் முடியும் முன்பே சரணாலயத்தில் போதிய பறவைகளின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. அதனால் பார்வையாளர்கள் வருகையும் குறைந்து வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com