சென்னை: காலா திரைப்படத்திற்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த 7-ந்தேதி நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் படத்திற்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் காலா திரைப்படத்திற்கு திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
'காலா' வெளியாகியுள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரி செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் பொதுநல மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு புதனன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.