சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கியுள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 70-க்கும் அதிகமான நாள்கள் சிகிச்சை பெற்ற அவர், அதே ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்தார்.
அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்கெனவே அடிக்கல் நாட்டிய நிலையில் நினைவிடத்துக்கான கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கியுள்ளன.