ஜாக்டோ -ஜியோ போராட்டம்: 10 -க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி: தலைமைச் செயலகம் நோக்கி பேரணி செல்ல முயற்சி

ஜாக்டோ -ஜியோ சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து 3 -ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 10 -க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்ததையடுத்து அவர்கள்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ -ஜியோ அமைப்பினரை புதன்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ -ஜியோ அமைப்பினரை புதன்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்.

ஜாக்டோ -ஜியோ சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து 3 -ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 10 -க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்ததையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலகத்தை நோக்கி புதன்கிழமை மாலை பேரணியாகச் செல்ல முயன்ற ஜாக்டோ -ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்து விடுவித்தனர். போலீஸாரின் இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து, காமராஜர் சாலையில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களைச் சேர்ந்த (ஜாக்டோ -ஜியோ) 250 -க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை, சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை தொடங்கினர். 
போராட்டத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மாலை, 2 ஊழியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதி: இதைத்தொடர்ந்து 3 -ஆவது நாளாக உண்ணாவிரதம் புதன்கிழமையும் உண்ணாவிரதம் நீடித்தது. 
அப்போது, ஜாக்டோ -ஜியோவின் மாநில செய்தித் தொடர்பாளர் கே. தியாகராஜனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
அதேபோன்று 10 -க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
தமிழக அரசு இதுவரை தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுத்து வருவதுடன், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இதே நிலை நீடித்தால் போராட்டத்தை வேறு வடிவத்தில் தீவிரப்படுத்துவதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை' என ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பினர் தெரிவித்தனர். 
அரசியல் தலைவர்கள் ஆதரவு: போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மார்க்சிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com