தீர்ப்பால் தங்கள் தரப்புக்கு எந்தப் பின்னடைவும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பு அளித்தது. அதில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தகுதி நீக்கப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உட்பட 21 பேரும் ஒன்றாகத்தான் உள்ளோம். தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தாலும் என்னுடன்தான் 18 பேரும் இருப்பார்கள். நானே போங்கள் என்று சொன்னாலும் 18 பேரும் என்னைவிட்டு போக மாட்டார்கள்.
பணத்துக்காகவோ, சொத்துக்காகவோ தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் என்னுடன் இல்லை. தீர்ப்பால் தங்கள் தரப்புக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. மக்கள் விரும்பாத இந்த அரசுக்கு மேலும் அவகாசத்தை நீதிமன்றம் அளித்துள்ளது. சபாநாயகர் உத்தரவில் புதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பா? என்றார்.