5 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, கோவை, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, கோவை, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 
வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம், திசை மாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சின்னக்கல்லாரில் 120 மி.மீ.: வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம், சின்னக்கல்லாரில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் 110 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலா, கூடலூர் பஜாரில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றார் அவர். 
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழகம், புதுச்சேரி கடலோரங்களில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கடல் அலைகள் 3.5 மீட்டர் முதல் 4.5 மீட்டர் உயரம் வரை எழக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
4 இடங்களில் வெயில் சதம்: வியாழக்கிழமைஅதிகபட்சமாக, திருத்தணியில் 104 டிகிரி வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 103 டிகிரியும், கடலூர், சென்னை மீனம்பாக்கத்தில் தலா 102 டிகிரியும் வெயில் பதிவானது. தூத்துக்குடியில் 99 டிகிரியும், பரங்கிப்பேட்டை, மதுரை விமான நிலையத்தில் தலா 98 டிகிரியும் வெப்பநிலை நிலவியது. புதுச்சேரியில் 100 டிகிரி வெப்பநிலை காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com