மதுரை: கடவுள் அருளால் இம்முறை தமிழகத்துடனான நீர் பங்கீட்டில் பிரச்னை இல்லை என்று மதுரையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் மழை நன்றாக கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 6 நாட்களுக்கும் மேலாக அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனைத் தொடர்ந்து கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் கடவுள் அருளால் இம்முறை தமிழகத்துடனான நீர் பங்கீட்டில் பிரச்னை இல்லை என்று மதுரையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அவர் வெள்ளியன்று மாலை மதுரை வந்திருந்தார். சுவாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கடவுளின் கருணையால் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே இரு மாநிலங்களும் இடையே நீரை பங்கிடுவதில் பிரச்சனை இருக்காது. அதனால் கடவுளின் அருளால் இம்முறை தமிழகத்திற்கு நீர் திறப்பதில் பிரச்னை இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.