ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து அனுமதி பெறாமல் வெள்ளிக்கிழமை மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 1,500 விசைப்படகு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலான மீன்பிடிக்கத் தடைக்காலம் வியாழக்கிழமை நள்ளிரவு முடிவுக்கு வந்தது. தடை காலம் முடிவடைந்த நிலையில், வழக்கமாக வெள்ளிக்கிழமை விசைப்படகுகள் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மாட்டார்கள். இதனால் சனிக்கிழமை காலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல திட்டமிட்டிருந்தனர்.
மீனவர்கள் அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க செல்ல வேண்டும் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன் மீனவ சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்து இருந்தார். இதனிடையே வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முன்பாகவே ராமேசுவரத்தில் இருந்து சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பாம்பன் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மண்டபம் பகுதியில் 650 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்வளத்துறை அனுமதி டோக்கன் பெறாமலே மீன்பிடிக்க சென்றன.
வழக்குப்பதிவு: இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன் கூறியது: சனிக்கிழமை காலை மீன்வளத்துறையின் மூலம் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்றுக் கொண்டு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என மீனவ சங்கத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு முன்பாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அரசின் அனுமதி பெறாமல் மீன்பிடிக்க சென்ற படகுகள் மீது வழக்குப்பதிவு செய்து மானிய விலை டீசல் வழங்குவதும், மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்குவதும் ரத்து செய்யப்படும். மேலும் படகுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.