சுங்கச்சாவடி தாக்குதல், என்எல்சி முற்றுகை ஆகிய வழக்குகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரிய நிலையில், நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடத்தியபோது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளுக்காக ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு முறை ஒத்திவைத்தது.
இதையடுத்து இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நாகர்கோவிலில் தங்கி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளது.