அரசுப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உதகையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் விபத்துகள் குறைவு. நீலகிரி மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்ற எதிரணியினரின் குற்றச்சாட்டு தவறானதாகும். தமிழகத்தில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலையே தற்போதும் கடைப்பிடிக்கப்படுவதால் நீலகிரி, கன்னியாகுமரி, சென்னை மாநகரம் போன்ற பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. தேசிய அளவில் ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் விபத்துகள் ஏற்படுவதாக கூறும் நிலையில் தமிழகத்தில் 17,000 விபத்துகள் மட்டுமே ஏற்படுகின்றன. போக்குவரத்துத் துறையில் நாட்டிலேயே தமிழகம்தான் சிறப்பாகச் செயல்படுவதாக மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறையே தெரிவித்துள்ளது.
விரைவில் 5,000 புதிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில், முதல்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ள 2,000 பேருந்துகளில் நீலகிரி மாவட்டத்திற்கு 39 பேருந்துகள் வழங்கப்படும். இதில், முதல்கட்டமாக 13 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும். உதகையிலிருந்து பெங்களூருக்கு உறங்கும் வசதி கொண்ட பேருந்துகளும் இயக்கப்படும். தற்போது மந்தாடா விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மற்றொருவர் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பதால் அவரது குடும்பத்தார் இழப்பீடு கோரும்பட்சத்தில் நிதி உதவி வழங்கப்படும் என்றார்.