தமிழகத்தை வடிகாலாக மட்டுமே கர்நாடகம் பார்ப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கபினி அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கன அடிக்குக் கூடுதலாக தண்ணீர் வந்தபோது மட்டும் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு விட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையோ மதித்து கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை. அணையின் பாதுகாப்பு கருதிதான் தண்ணீர் திறக்கப்பட்டது என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.
தமிழகத்தை வடிகாலாகத்தான் கர்நாடகம் பார்க்கிறதே தவிர, காவிரியில் சம உரிமை கொண்ட மாநிலமாகப் பார்க்க மறுக்கிறது. இந்த நிலை தொடர அனுமதிக்கக் கூடாது. கர்நாடகத்திடமிருந்து தண்ணீரைப் பெறுவது தமிழகத்தின் உரிமை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு முழு வடிவம் கொடுக்கும்போதுதான், இச்சிக்கலை ஓரளவாவது தீர்க்க முடியும்.
எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடகத்தின் சார்பிலான உறுப்பினரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இந்த மாத இறுதிக்குள் ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டி, குறுவைப் பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.