உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லதுரையை பதவி நீக்கம் செய்யாததற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்புக்குப் பிறகும் அவரை பதவியில் இருந்து நீக்காமல், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அதிமுக அரசு வாய்ப்பளித்திருப்பது மிகவும் கண்டத்துக்குரியது. துணைவேந்தரைப் பதவி நீக்கம் செய்யாமல் தமிழக ஆளுநரும் மெளனம் காப்பது பல்வேறு ஐயப்பாடுகளுக்கு இடமளிக்கிறது.
எனவே, துணைவேந்தர் செல்லதுரையை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். இனி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமனத்துக்காக அமைக்கப்படும் தேடுதல் குழுவிடம் மீண்டும் செல்லதுரை விண்ணப்பம் அளித்தால் அதை நிராகரிக்க வேண்டும். அவரது பதவிக் காலத்தில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள அனைத்து முறைகேடுகளையும் முறையாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உயர் கல்வித் துறைச் செயலர் உடனே அமைக்க வேண்டும்.