சென்னை: அரசியல்வாதிகள் நீதிமன்றத் தீர்ப்பினை விமர்சிப்பதை வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதனன்று காவல்துறையில் உள்ளஆர்டர்லி முறை தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவ்வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய அவர், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாகவும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி ஒரு தீர்ப்பும் நீதிபதி சுந்தர் மற்றொரு தீர்ப்பும் வழங்கினார்கள். மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களை பலர் தெரிவித்தனர். வன்மையான கண்டனங்களும் எழுப்பட்டது.
இதுதொடர்பாக நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:
நீதிமன்றத்தின் தீர்ப்பையும், தீர்ப்பை வழங்கிய நீதிபதி குறித்தும் பலவாறு விமர்சிப்பதை வேடிக்கை பார்ப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அத்துடன் அரசியல்வாதிகள் நீதிமன்றத் தீர்ப்பினை விமர்சிப்பதை வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக செவ்வாயன்று வேறொரு வழக்கு விசாரணையின் பொழுதும் இதே தகுதி நீக்கக் தீர்ப்பு குறித்து, 'நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தோர் மீது காவல்துறையால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? புகார்கள் வரவேண்டும் என்று காத்திருக்கிறீர்களா?' என்று கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன் இதுதொடர்பாக இரண்டு வாரத்திற்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பித்தக்கது.