நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் 

பெண் பத்திரிக்கையாளர்களைப் பற்றி முகநூலில் தரக்குறைவான கருத்தைப் பகிர்ந்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. 
நடிகர் எஸ்.வி.சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் 

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்களைப் பற்றி முகநூலில் தரக்குறைவான கருத்தைப் பகிர்ந்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், எழும்பூர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. 

கடந்த மே மாதம் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான சர்ச்சைக் கருத்தை நடிகர் எஸ்வி சேகர் முகநூலில் பகிர்ந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் வலுவான எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த விவகாரத்தில் அவர் மீது பல்வேறு இடங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

பத்திரிகையாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் மத்திய குற்றவியல் போலீஸார் எஸ்வி சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அவர் போலீஸாரால் கைது செய்யப்படாமல் வெளியே சுதந்திரமாக இருந்து வந்தார். இதற்கு போலீஸார் மீது கடுமையான விமரிசனங்கள் சமூகவலைதளங்களில் எழுந்தன. 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்றும் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் எஸ்வி சேகர் மீது மத்திய குற்றவியல் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து, அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் குறித்து விளக்கம் அளிக்க 20-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியது. 

அதன்படி எஸ்வி சேகர் புதனன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். நீண்ட நாட்களாக தலைமறைவாகி தற்போது நீதிமன்றத்தில் ஆஜராவதால் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் நேரில் ஆஜரான எஸ்வி சேகருக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com