திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் புதன்கிழமை ஆஜராகினர்.
நடிகர் பாலா இயக்கிய அவன் இவன்' திரைப்படத்தில் சொரிமுத்து அய்யனார் சுவாமி குறித்தும், சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும் தவறாகவும் இழிவாகவும் சித்திரித்ததாகக் கூறி சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜன், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் ஆகியோர் ஜூன் 20இல் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், படத் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம், இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் முன்னிலையில் புதன்கிழமை ஆஜராகினர். வழக்கை நீதிபதி, வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 22) ஒத்திவைத்து, அன்றைய தினம் 3 பேரும் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்.