சென்னை: ஈரானில் சிக்கித் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்களை மீன்பிடிப்பு பணிக்காக, ஈரான் நிறுவனம் ஒன்று பணியமர்த்தி இருந்தது. ஆனால் அவர்களுக்கான ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும் அவர்களுக்கான உரிய ஊதியம் வழங்கப்படவில்லை. அத்துடன் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளையும் அந்த நிறுவனம் வாங்கி வைத்துக் கொண்டு தர மறுக்கிறது. இதன் காரணமாக அவர்கள் தற்பொழுது ஈரானில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரானில் சிக்கித் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ஒப்பந்தப்படி ஊதியம் அளிக்கப்படாமல் ஈரானில் சிக்கித் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரானில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுத்து மீனவர்கள் மீட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்