சென்னை: கார் பருவ சாகுபடிக்காக, தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தாமிரபரணி ஆற்றில் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கீழ் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் மற்றும் திருநெல்வேலி கால்வாய் ஆகிய ஏழு கால்வாய்களின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த் தேக்கங்களிலிருந்து தாமிரபரணி ஆற்றில் 24.6.2018 முதல் 21.10.2018 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.
இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், நாங்குனேரி திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள 20729 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.