ஜல்லிக்கட்டு வன்முறை: விசாரணை முடிய இன்னும் ஓராண்டாகும்: ஆணையத் தலைவர் தகவல்
ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணை முடிய இன்னும் ஓராண்டாகும் என்று விசாரணை ஆணையத் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான எஸ்.ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. விசாரணை ஆணையத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகிறார். அவர் ஆறாவது கட்ட விசாரணையை புதன்கிழமை தொடங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக மதுரை மாவட்டத்தில் 1,002 பேர், விசாரணை ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். இதில் இதுவரை 106 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு, 74 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தவர்களில் பலர் விசாரணைக்கு ஆஜராவதில்லை. விசாரணைக்கு ஒருமுறை மட்டுமே அழைப்பாணை அனுப்பப்படும்.
கோவை, சேலத்தில் விசாரணை முடிந்துவிட்டது. சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளது. மதுரை, சென்னையில் இந்த மாதம் முதல் இரண்டு கட்டங்களாக விசாரணை நடத்தி முடிக்கப்படும். இதற்கு 8 முதல் 9 மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு 3 மாதங்களில் அறிக்கை தயார் செய்யப்படும். ஆகவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்த விசாரணை முடிய ஓராண்டாகும்.
விசாரணைக்கு வரும் நபர்களுக்கு காவல் துறையினரின் அச்சுறுத்தல் இல்லை. சுதந்திரமாக விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர். பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த பலரும் விசாரணைக்கு ஆஜராவதில்லை. ஜல்லிக்கட்டு வன்முறையின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கலாம் என்றார் அவர்.