சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் ஐ.ஜி. சத்தியமூர்த்தி இருவரும் 28-இல் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுப்பப்பட்ட சந்தேகங்களின் காரணமாக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த ஆணையமானது அரசு அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் அவரது வீட்டுப் பணியாளர்கள் என பலருக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆடிட்டரும் 'துக்ளக்' இதழ் ஆசிரியருமான குருமூர்த்தி மற்றும் ஐ.ஜி. சத்தியமூர்த்தி இருவரும் 28-இல் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுது உள்ளே செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடமும் விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.
முன்னதாக முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஆணையத்தின் முன் ஆஜராகி சாட்சியமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.