தரமான தமிழ்ப் படங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், 149 படங்களுக்கு மானியத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை வழங்கினார்.
இதன் தொடக்கமாக 10 திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியமாக தலா ரூ.7 லட்சத்துக்கான காசோலைகளை அவர் அளித்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 2007 முதல் 2014 வரை வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களில் மானியம் பெறத் தகுதியான படங்களைத் தேர்வு செய்யக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் 149 திரைப்படங்களைத் தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இப்படத் தயாரிப்பாளர்களுக்குத் தலா ரூ.7 லட்சம் வீதம், ரூ.10.43 கோடிக்கான காசோலைகள் தயாராக உள்ளன. அதில், 10 தயாரிப்பாளர்களுக்கான காசோலைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.