தமிழக அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர்கள் 73 பேர் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் சர்வதேச யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனங்களைச் செய்து காட்டினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:
யோகாவின் அவசியத்தையும், நன்மைகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதும், யோகாவின் முழு பயன்களையும் பெறவேண்டும் என்பதுமே சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நோக்கம். தமிழகத்தில் 31 அரசு வட்டார மருத்துவமனைகளிலும், சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளிலும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 165 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்கள் உள்ளன.
மேலும், அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவில் 73 நிபுணர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். பொதுமக்கள் இவ்வசதிகளை முழுமையாகப் பயன்படுத்தி நோய்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகாசனப் பயிற்சிகளை மேற்கொண்டனர்.