மதுரை: கொள்கை முடிவுப்படியே ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதால், வைகோவின் மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில் கொள்கை முடிவுப்படியே ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
வைகோ தொடர்ந்த வழக்கானது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், 'உயர் மட்ட அளவில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்தது' என்று தெரிவித்தார்.
தமிழக அரசு தெரிவித்த தகவலை ஏற்றுக் கொண்டு, வைகோ தொடர்ந்த வழக்கினை முடித்து வைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.