அரசு பெண் ஊழியர்களுக்கு முதல் குழந்தையே இரட்டை குழந்தையாக இருந்தாலும், இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலர் எஸ்.சுவர்ணா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அண்மையில் வெளியிட்ட உத்தரவு:-தமிழக அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் கருவுற்றதில் இருந்து குழந்தை பெற்றுக் கொள்ளும் வரையில், 9 மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு இந்த விடுப்புச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, அரசு ஊழியர்களுக்கான அடிப்படை விதிகளில் 101 (ஹ) பிரிவில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
விடுப்பு அளிக்க மறுப்பு: இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், முதல் பிரசவத்திலேயே இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெண் ஊழியர்களுக்கு இரண்டாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. மேலும், இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சாதகமான உத்தரவுகளைப் பெற்று வைத்துள்ளனர்.
விடுப்பு அளிக்கப்படும்: சில அரசு பெண் ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை ஏற்று, முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த பெண் ஊழியர்களுக்கு இரண்டாவது பிரசவத்துக்காகவும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும். இது குறித்து அரசு ஊழியர்களுக்கான அடிப்படை விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு தனியாக வெளியிடப்படும் என்று அரசுத் துறை செயலாளர் சுவர்ணா தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.