தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவருக்கு சர்வதேச ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். இயந்திரப் பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வருபவர் கண்ணன் வீரராகவன். இவர் தனது ஆய்வுப் படிப்புக்காக கேம்பிரிட்ஜ் இந்தியா ராமானுஜன் உதவித்தொகை பெற்றுள்ளார். இந்த மதிப்புமிக்க விருதின் மூலம் இவர் லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆய்வு உதவித்தொகை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் கேம்பிரிட்ஜ் அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணத்தை முழுமையாக அளிப்பதுடன், வருடாந்திர உதவித்தொகையாக 16,800 பவுண்ட்ஸ் கண்ணனுக்கு வழங்கப்படும்.
கண்ணன் தனது பொறியியல் சார்ந்த ஆய்வுப் படிப்பை லண்டனிலுள்ள ராபின்சன் கல்லூரியில் பேராசிரியர் என். சுவாமிநாதனுடைய சூறாவளி தீவிரம் குறித்த மாடலிங் ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளவுள்ளார். இவர் தனது ஆசிரியர் ஆலோசகரான சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக முனைவர் கே. நரேனிடம் கணக்கீட்டு திரவ இயக்கவியல் ஆராய்ச்சி மேற்கொண்டார். இதன் மூலம் இவரால் முன்பு பெல்ஜியத்தின் லூவன் பல்கலைக்கழகத்திலும், கனடாவின் மனிடோபா பல்கலைக்கழகத்திலும், பின்னர் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்திலும் (ஐஐடி)ஆய்வு செய்ய முடிந்தது. இந்தியாவிலிருந்து இந்த ஆய்வு உதவித்தொகைக்காகத் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களில் கண்ணனும் ஒருவர்.