திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், அந்தப் பெண்ணையும், அவரது தாயையும் கொலை செய்துவிட்டு, இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
போளூரை அடுத்த படவேடு ஊராட்சி, சகாயபுரம் - கொண்டம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் மகன் அன்பழகன் (30). இவர், சென்னையில் லாரி ஒட்டுநராகப் பணியாற்றி வந்தார். அன்பழகன் அதே கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் மகள் நிர்மலாவை (24) காதலித்து வந்தாராம். மேலும், அவ்வப்போது சிவராமன் குடும்பத்துக்கு அன்பழகன் பண உதவி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், நிர்மலாவை அன்பழகனுக்குத் திருமணம் செய்து தருவதாக சிவராமன் கூறி வந்தாராம்.
இந்த நிலையில், நிர்மலாவை சந்தவாசலை அடுத்த வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அண்மையில் மணம் முடிக்க சிவராமன் முடிவு செய்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து சென்னையில் உள்ள அன்பழகனுக்குத் தெரிய வந்ததால், அவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொண்டம் கிராமத்துக்கு வந்து, சிவராமனிடம் சென்று நிர்மலாவைத் தனக்குத் திருமணம் முடித்து வைக்கும்படி கேட்டாராம்.
அப்போது, அவருக்கு நிர்மலாவை திருமணம் செய்து வைக்க முடியாது என்று அன்பழகனிடம் சிவராமன் கூறினாராம்.
இதனால், ஆத்திரமடைந்த அன்பழகன் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிவராமன் வீட்டுக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த சிவராமனை கத்தியால் வெட்டிவிட்டு, அவரது மனைவி சாமூண்டீஸ்வரியை (45) சுவரில் மோதினார். அவர் இறந்தவுடன், வீட்டின் மற்றோர் அறையில் தூங்கிக் கொண்டிருந்த நிர்மலாவின் முகத்தில் தலையணை அமுக்கிக் கொலை செய்தார்.
பின்னர், அதே வீட்டில் அன்பழகனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
அந்தப் பகுதியில் உள்ளவர்கள் சனிக்கிழமை காலை சிவராமன் வீட்டைக் கடந்து சென்றபோது, சிவராமன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டு, சந்தவாசல் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக அங்கு வந்த போலீஸார் சிவராமனை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நிர்மலா, சாமூண்டீஸ்வரி, அன்பழகன் ஆகியோரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து சந்தவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொன்னி சனிக்கிழமை சென்று ஆய்வு செய்தார். ஆரணி டி.எஸ்.பி. செந்தில் உள்ளிட்ட போலீஸார் உடனிருந்தனர்.