தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் 10 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) கூடியது. அதில், ஆளுநரின் ஆய்வு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்ததால் திமுக, காங்கிரஸ் மற்றும் இந்தியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
"ஆளுநர் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுகிறார். மாநில சுயாட்சிக்கு எதிராக அவர் ஆய்வுகளை நடத்தி வருகிறார். இதுகுறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க முற்பட்டேன். அதற்கு ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் பேச முடியாது என்று சபாநாயகர் தெரிவித்தார். 1995-இல் ஜெயலலிதா ஆட்சியில் தான் ஆளுநர் சென்னாரெட்டிக்கு எதிராக விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றேன். அது பழைய கதை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
ஆளுநரின் ஆய்வு குறித்து போராட்டம் நடத்தினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என மிரட்டல் தொனியில் ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. மாநில சுயாட்சிக்காக 7 ஆண்டுகள் இல்லை, ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தயார். மாநில சுயாட்சிக்காக எந்த தியாகம் செய்யவும் தயார். தமிழகத்தில் தொடர்ந்து ஆளுநர் ஆய்வு நடத்தினால், திமுகவின் கருப்புக் கொடி போராட்டம் தொடரும்.
பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவில்லை. மக்களின் உணர்வை புரிந்துகொண்டு அதற்கேற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்றார்.