உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் தொடங்கியது முதல் தமிழகத்தில் மின்பயன்பாடு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ரஷியாவில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டி வரும் ஜூலை மாதம் வரை நடைபெறவுள்ளது. இதில் ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரேசில், ஸ்வீடன், தென்கொரியா, ஜப்பான், போலந்து, மெக்ஸிகோ, உருகுவே, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் மாலை 5.30 தொடங்கி நள்ளிரவு சுமார் 1:15 மணி வரை நடைபெற்று வருகின்றன. இதனால், கால்பந்து ரசிகர்கள் ஏராளமானோர், ஆட்டத்தை நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும், தொலைக்காட்சியில் கண்டுகளித்து வருகின்றனர். இதனால் மாநிலத்தில் மின் பயன்பாடு அதிகரித்து அதனால் மின் தேவையும் வழக்கத்தை விட 500 மெகாவாட் உயர்ந்துள்ளது.
வழக்கமான நாள்களில் 13, 400 மெகாவாட் மின்சாரம் மட்டுமே இரவு நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் தொடங்கியது முதல், 500 மெகாவாட் கூடுதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்றபோது இரவு 10 மணி வரையே போட்டிகள் நடந்தன.
ஆனால், கால்பந்து போட்டிகள் நள்ளிரவைத் தாண்டியும் நடைபெறுவதால் கால் பந்தாட்ட ரசிகர்கள் அவற்றை ஆர்வத்துடன் தொலைக்காட்சிகளில் பார்வையிடுவதால், தொலைக்காட்சிகள், மின்விசிறிகள், குளிர்சாதனங்கள் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
சென்னை மட்டுமின்றி, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பெரு நகரங்களில் மின்பயன்பாடு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. அத்துடன் கோடை வெப்பம் தொடர்ந்து இருந்து வருவதாலும் மின்பயன்பாடு அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.