தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் மீது ரூ.24 கோடி வரை புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் வைத்திருந்ததாக சிபிஐ முதலில் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, அவருடைய இல்லம் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து சிபிஐ கூடுதலாக 2 வழக்குகளை பதிவு செய்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு படி ஒரே குற்றத்துக்காக பல வழக்குகளை பதிவு செய்யக்கூடாது என்று கூறி சேகர் ரெட்டி தரப்பு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) சேகர் ரெட்டி மீது பதிவு செய்யப்பட்ட முதல் வழக்குப் பதிவை தவிர்த்து மற்ற 2 வழக்குப் பதிவுகளை ரத்து செய்தது. சேகர் ரெட்டி தவிர மற்ற 4 பேர் மீதான வழக்குப் பதிவையும் ரத்து செய்ய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
வழக்கு விவரம்:
கடந்த 2016 ஆம் ஆண்டு, சட்ட விரோதமாக ரூ.34 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சேகர் ரெட்டி உள்ளிட்டோரை சிபிஐ கைது செய்தது.
இதில் ரூ.24 கோடி வரை புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுக்களைப் பதுக்கி வைத்ததற்காக சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது முதல் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.8 கோடி வரை கைப்பற்றப்பட்ட போது 2-ஆவது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவரது சென்னை அலுவலகத்தில் நடத்திய சோதனையில் சிக்கிய ரூ.2.50 கோடி மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்ததற்காக, சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது 3-ஆவது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன்மீது தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த எஃப்.ஐ.ஆர்.-களை ரத்து செய்யக் கோரி சேகர் ரெட்டி, மற்றும் ஆடிட்டர் பிரேம்குமார், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதில், ஒரே குற்றத்துக்காக பல வழக்குகளைப் பதிவு செய்யக்கூடாது என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் அனைத்தும் மணல் குவாரி தொழில் மூலமாக வந்தவை.
இதை சிபிஐ கருத்தில் கொள்ளாமல் வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, தங்களுக்கு எதிரான எஃப்ஐஆர்-களை ரத்து செய்ய வேண்டும், என அந்த மனுவில் கோரியிருந்தனர்.