சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை தடை விதித்தனர்.
கோவை கோட்டம், போளுவாம்பட்டி வனச் சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது கோவை குற்றாலம் அருவி. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிறுவாணி அணைப் பகுதியில் மழை பெய்யும்போது அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும். அவ்வாறு நீர்வரத்து அதிகரிக்கும்போது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வனத் துறையினர் தடை விதிப்பது வழக்கம்.
கடந்த சில நாள்களாக சிறுவாணி அணைப் பகுதியில் பெய்த மழையால் ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல வனத் துறையினர் தடை விதித்திருந்தனர்.
மழை குறைந்ததால் ஜூன் 21ஆம் தேதிமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை வனத் துறையினர் மீண்டும் தடை விதித்தனர். மழையின் அளவு குறைந்தால் மட்டுமே புதன்கிழமை அனுமதி வழங்கப்படும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.