வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க வரும் 30 -ஆம் தேதி கடைசி நாள் என தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் கூறியது:
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில், மின்கட்டமைப்புடன்கூடிய சூரியஒளி மேற்கூரை அமைக்கும் திட்டத்தின்கீழ் வீடுகளில் சூரியஒளி மேற்கூரை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. மருத்துவமனைகள், அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் இச்சலுகை பொருந்தும். ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க ரூ.60,000 செலவாகும். இதில், ரூ.18,000 மானியமாக வழங்கப்படும்.
ஒரு கிலோவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான சூரிய ஒளி மேற்கூரை அமைக்க குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம் தேவைப்படும். ஒரு கிலோவாட் அளவுக்கான மேற்கூரை அமைத்தால் மாதம் ஒன்றுக்கு 250 யூனிட் வரை சூரிய ஒளி மூலம் மின்உற்பத்தி செய்ய முடியும். இந்த சூரியஒளி மின்சாரத்தைக் கணக்கீடு செய்வதற்காக இருவழி பயன்பாடு மீட்டர் பொருத்தப்படும்.
அதாவது சூரிய ஒளி மேற்கூரை மின் கட்டமைப்புகள் கிரிட்டுடன் இணைக்கப்படும். மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வரை மின்கட்டணம் மிச்சமாகும். அத்துடன் சூரிய ஒளி மேற்கூரைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் 5 ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிக்கப்படும்.
இத்திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் கடந்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,700 -க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 12 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிப்பதற்கு, வரும் 30 -ஆம் தேதி கடைசி நாளாகும் என அவர்கள் தெரிவித்தனர்.