திருச்செந்தூா்: தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஒரே கூட்டணியாக செயல்படுவது நல்லதல்ல என்று மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.
கன்னியாகுமரி அருகே உள்ள களியக்காவிளையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சா்கள் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மனோஜ் சின்ஹா இருவரும் வருகை தந்திருந்தனர். . பின்னர் அவர்கள் இருவரும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்வதற்காக வியாழக்கிழமை இரவு வந்திருந்தனா்.
வெள்ளிக்கிழமை காலை சுவாமி தரிசனத்திற்குப் பிறகு திருக்கோயில் விருந்தினா் மாளிகையில் மத்திய இணையமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தி.மு.க. செயல் தலைவா் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு சென்ற போது அவருக்கு, மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளுக்கு சாத்தப்பட்ட மாலை மற்றும் அம்பாளுக்கு சாத்தப்பட்ட திருமஞ்சனம் வழங்கப்பட்ட போது அதனை அவர் அவமானபடுத்தியதை தமிழ்நாட்டில் உள்ள எந்த கட்சியும் வாய்திறந்து பேசவில்லை.
அந்த ஆலயம் அரசின் கட்டுபாட்டில் உள்ளது மிகபெரிய ஆலயம். அங்குள்ள தெய்வம் அவமானப்படுத்தப்பட்ட போது குறைந்தபட்சம் சிறப்பு விவாததிற்காவது எடுத்திருக்க வேண்டும். இது போன்ற அவமானகரமான செயல்களை தமிழ்நாடு அரசு பொறுத்துக் கொண்டு இருந்தது என்று சொன்னால், ஆலய நிா்வாகத்தில் அருகதையற்ற அரசாங்கமாக இது மாறிவிடும்.
அதேபோல் ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பிக்கை இல்லாதவா்களுக்கு மரியாதை செலுத்திய கோவில் நிா்வாகத்தினா் மற்றும் அா்ச்சகா்கள் மீது நடவடிக்கை எடுத்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். ஸ்டாலின் பரிகாரத்திற்கு சென்று விட்டு வந்த சம்பவத்தினால், இன்று தெய்வத்திற்கு பரிகாரம் செய்ய நிலை ஏற்பட்டுள்ளது. பரிகாரம் செய்ய வேண்டும் என சொன்னால் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒட்டு மொத்த கோவில்களுக்கும் பரிகாரம் செய்வது நல்லது.
சட்டசபை நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையில் ஆளும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றும் விதமாக செயல்படுவது தமிழகத்திற்கு நல்லதல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.