சென்னை: கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் விதிமுறைகளை மீறி பங்களாக்கள் கட்டியுள்ளதாக கமல் உள்ளிட்ட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் உத்தண்டியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிணைத்து தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பங்களா ஒன்றினைக் கட்ட அனுமதி கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு (சி.எம்.டி.ஏ) விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனது விண்ணப்பம் நான் தேர்வு செய்திருந்த நிலம் மற்றும் வரைபட திட்டமானது, அந்தப் பகுதியில் வீடு கட்டுவதற்கு உள்ள விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன் பின்னர் நான் மற்றொரு விண்ணப்பம் செய்திருந்தேன், ஆனால் அதுவும் சரியான காரணம் எதுவும் கூறாமல்,அனுமதியும் கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.ஆனால் அதே நேரம் அந்த பகுதியில் சி.எம்.டி.ஏ விதிமுறைகளுக்கு மாறாக கடற்கரைக்கு நெருக்கமாகவும் மற்றும் சாலையில் இருபுறங்களிலும் என நடிகர் கமல், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் சொகுசு பங்களாக்கள் அப்பகுதியில் கட்டப்பட்டுள்ளன.
எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சி.எம்.டி.ஏவுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ரங்கநாதனின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவானது இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் விதிமுறைகளை மீறி பங்களாக்கள் கட்டியுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட 138 பேருக்கு சி.எம்.டி.ஏ நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.