வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை: உதயகுமாரிடம் அமலாக்கத் துறை விசாரணை
வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை புகார் தொடர்பாக, பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப. உதயகுமாரிடம் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அந்தப் பகுதி மக்களையும், மீனவர்களையும் திரட்டி சுப. உதயகுமார் கடந்த 2011-ஆம் ஆண்டு பெரும் போராட்டம் நடத்தினார்.
இப்போராட்டத்துக்கு,வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி உதவி பெறப்படுவதாக காவல்துறையினரால் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக உதயகுமாரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, சில ஆவணங்கள் அப்போது கைப்பற்றப்பட்டன.
இப்போராட்டம் கைவிடப்பட்ட பின்னர் உதயகுமார், ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து செயலாற்றினார். பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறிய அவர், பச்சைத் தமிழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
அமலாக்கத் துறை விசாரணை: இந்நிலையில் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை செய்வதற்கு சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்து உதயகுமாருக்கு சில நாள்களுக்கு முன்பு ஒரு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்த அழைப்பாணையை ஏற்று, உதயகுமார் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஆஜரானார்.
அவரிடம் வெளிநாட்டு பணப்பரிவத்தனை தொடர்பான கேள்விகளுக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்ததாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவித்தனர்.