சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மக்கள் மாநாட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம்.எல். ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். வாக்களர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பணம் கொடுத்து தினகரன் முறைகேடாக வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரது வெற்றியை செல்லாது' என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி, அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகின்ற மார்ச் 27 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.