சென்னை: போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் திருச்சியில் கர்ப்பிணி பெண் உஷா மரணமடைந்த விவகாரம் கிரிமினல் குற்றத்திற்கு சமமான செயல் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் திருவெறும்பூரில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 3 மாத கர்ப்பிணியான உஷா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போக்குவரத்துக் காவலரின் மோசமான நடவடிக்கையால் கர்ப்பிணி உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தை தொடங்கினர். இரவு 7.30 மணியளவில் தொடங்கிய போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது.
ஒரு காவலர் செய்த தவறை தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்துவதா? என்று போராட்டத்தில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்கள் ரத்தம் சொட்ட சொட்டக் கதறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். போக்குவரத்து காவலர் தாக்கியதில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில் வியாழன் அன்று காலை உயர் நீதிமன்றம் கூடியதும் திருவெறும்பூரில் கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த சம்பவம் பற்றி, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வதாமன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அப்போது கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் போலீஸாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது; சட்டவிரோதமான செயல். சுருக்கமாக இது கிரிமினல் குற்றத்துக்கு நிகரான ஒரு செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.