புதுவை சட்டப்பேரவையில் அடுத்த ஆண்டு முதல் மகளிர் தின விழா நடத்தப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
புதுவை காமராஜர் நகர் தொகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து கூறும் நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் தொகுதி எம்எல்ஏவும், பேரவைத் தலைவருமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக் கூறி பேசியதாவது: மகளிர் தினத்தை முன்னிட்டு தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அப்போது நாங்கள் தேர்வு செய்து அனுப்பிய எம்எல்ஏ, மகளிர் தினத்தை முன்னிட்டு எங்களை சட்டப்பேரவைக்கு அழைத்து கெளரவிக்க வேண்டும் என்றனர். அதை ஏற்று இங்கு உங்களை வரவழைத்துள்ளேன். அடுத்த ஆண்டு அனைத்துத் தொகுதிகளில் இருந்தும் பெண்களை வரவழைத்து, நீங்கள் தேர்வு செய்த எம்.எல்.ஏ.க்கள் பேசும் இடம் எனக் கூறி சட்டப்பேரவையில் மகளிர் தின விழா நடத்தப்படும்.