பெரியார் சிலை தொடர்பாக எச்.ராஜா வெளியிட்ட கருத்துக்கு அதிமுக கண்டனம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை

தமிழகத்தில் எக்காலத்திலும் அராஜக செயல்களை அதிமுக அனுமதிக்காது என்று முதல்வர், துணை முதல்வர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
பெரியார் சிலை தொடர்பாக எச்.ராஜா வெளியிட்ட கருத்துக்கு அதிமுக கண்டனம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போன்று வெகு விரைவில் தமிழகத்தில் ஈ.வே.ராமசாமி (பெரியார்) சிலைகள் அகற்றப்படும் என்பது போன்று பாஜக தேசியத் தலைவர் ஹெச்.ராஜா ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

பின்னர், அந்தப் பதிவை தனது அனுமதியின்றி உதவியாளர் பதிவிட்டுவிட்டதாகவும், எனவே அந்தக் கருத்துக்கு வருத்தம் தெரிவித்தும், உதவியாளரை நீக்கி விட்டதாகவும் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு தரப்பில் இருந்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் ஹெச்.ராஜாவை கைது செய்யக் கோரியும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பெரியார் சிலை தொடர்பாக ஹெச்.ராஜா வெளியிட்ட கருத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவிக்கிறது. பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாய் திகழும் தமிழகத்தில் எப்படியாவது குழப்பம் விளைவித்து, குழம்பிய குட்டையிலே மீன் பிடிக்கலாம் என்று கருதுபவர்களின் எண்ணம் என்றைக்குமே பலிக்காது.

இதுபோன்ற அராஜக செயல்களை அதிமுக அனுமதிக்கும் என்று யாரும் கனவில் கூட நினைக்க வேண்டாம். தந்தை பெரியாரை தமிழ்ச் சமுதாயம் கடவுள் மறுப்பாளராகப் பார்க்கவில்லை. அவர் இல்லையெனில் திராவிடத்தில் எழுச்சி இல்லை. தமிழகத்தில் ஜாதி, மதம், தீவிரவாதம், ரௌடிகள், தாதாக்களின் சாம்ராஜ்யங்கள் இல்லை.

தமிழகம் எனும் அமைதியான குளத்தில் ஹெச்.ராஜா கல்லெறிந்துவிட்டார் என்பதுதான் மக்களின் கோபமாக உள்ளது. பெரியாரை அவமதிக்கும் எந்தச் செயல்களையும் ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை என்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com