சென்னை: காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை மதியம் அவசர கூட்டம் நடைபெற உள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவது மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில், நீர்வளத்துறை செயலாளர் உபயேந்திர பிரசாத் சிங் தலைமையில் வெள்ளியன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கர்நாடகா மாநில அதிகாரிகள் தரப்பில் இருந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி முடிவு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் தமிழக அதிகாரிகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப மேலாண்மை வாரியத்தைஉடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடபடவில்லை என்று நீர்வளத்துறை செயலர் கருத்து கூறியதால், அதனை பின்பற்றி வேறு தீர்வையே கர்நாடக அரசு முன்வைக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் சனிக்கிழமை மதியம் அவசர கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா மற்றும் தில்லியில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.