கோவை பல்கலை. துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன்
உதவிப் பேராசிரியரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணி நியமனத்துக்காக உதவிப் பேராசிரியரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணபதி இரண்டு முறை ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை கோவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமீன் கோரி கணபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
கணபதி தனது கடவுச்சீட்டை கோவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணை அதிகாரியின் முன் காலை மற்றும் மாலையில் ஆஜராக வேண்டும். மேலும் கணபதி கோவையை விட்டு வெளியில் செல்லக்கூடாது என நிபந்தனை விதித்து நீதிபதி ஜாமீன் வழங்கியுள்ளார்.