தேயிலைத் தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டியை மீண்டும் தாயிடம் சேர்க்க வனத் துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 10 வருடத்துக்கு முன்னர் இப்பகுதி வனத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. நாளடைவில் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி, தற்போது நூற்றுக்கணக்கான சிறுத்தைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இரவு நேரங்களில் குடியிருப்புகளை விட்டுத் தனியாக வெளியே அனுப்புவதைத் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்டேன்மோர் எஸ்டேட், சவரங்காடு டிவிஷன் தேயிலைத் தோட்டத்தில் வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் ஒரு சிறுத்தைக் குட்டி இருப்பதைப் பார்த்த தொழிலாளர்கள், வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு சென்ற வால்பாறை வனச் சரக அலுவலர் சக்திவேல் தலைமையிலான வனத் துறையினர் 3 வயது பெண் சிறுத்தைக் குட்டியை மீட்டு, ரொட்டிக் கடையில் உள்ள வனத் துறை பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு சென்று, கூண்டில் அடைத்துக் கண்காணித்து வந்தனர்.
பின்னர், இரவு 7 மணியளவில் சிறுத்தைக் குட்டியை மீட்கப்பட்ட இடத்துக்கே எடுத்துச் சென்று, அதன் தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.