காவிரிக்காக தமிழக வழக்கறிஞர்கள் 13 நாட்கள் வாதாடினார்கள்: வைகோ குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!
கோவை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழக வழக்கறிஞர்கள் 13 நாட்கள் மாநிலத்தின் வாதங்களை எடுத்து வைத்தார்கள் என்று வைகோ குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிறன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்பொழுது அவர், 'காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடாது என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. காவிரி வழக்கில் தமிழக அரசு சரியாக வாதாடவில்லை.' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஞாயிறன்று நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக கோவை சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
காவிரி வழக்கில் தமிழகத்தின் வாதங்கள் முழுமையாக முன்வைக்கப்பட்டன. தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக தமிழகம் வாதங்களை முன்வைக்கவில்லை என வைகோ பேசுகிறார். ஆனால் காவிரி வழக்கில் தமிழக வழக்கறிஞர்கள், 13 நாட்கள் தங்களது வாதங்களை எடுத்து வைத்துள்ளனர்.
அதேபோல அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதும் அரசியலுக்காகவே பேசப்படுகிறது. மக்களவை உறுப்பினர்களாக இருந்துகொண்டு வலியுறுத்தும் பொழுதே இதுவரை எதுவும் நடக்கவில்லை. காவிரி விவகாரத்தில் தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.