கோவை: பல்வேறு விஷயங்களுக்கு ரஜினி பதில் சொல்லாமல்தான் இருக்கிறார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் திங்களன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தண்ணீர் சேமிப்பில் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் ஈடுபட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். காவிரி பிரச்னையை தீர்க்க முடியாத பிரச்னையாக மாற்றி இருக்கக் கூடாது' என்று தெரிவித்தார்.
அப்பொழுது அவரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க ரஜினி மறுக்கிறாரே என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு கமல், ' காவிரி விவகாரம் என்றில்லை; அவர் பல விஷயங்களில் பதில் சொல்வதில்லை. எனவே இது ஒன்றை மட்டும் நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?' என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று இமயமலை செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார். அப்பொழுது அவரிடம் காவிரி விவகாரம் தொடர்பாகவும், சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலை வழக்கு தொடர்பாகவும் கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர். அதற்கு அவர் எந்த பதிலையும் சொல்லாமல் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு வேகமாகச் சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.