அனுமதியின்றி மலையேற்றம் சென்றதால் விபத்தில் சிக்கினர்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
தேனி மாவட்டம். குரங்கணியில் அனுமதியின்றி மலையேற்றம் சென்றதால் விபத்தில் சிக்கியுள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை தெரிவித்தார்.
தேனி மாவட்டம் குரங்கணியில் காட்டுத் தீயில் சிக்கி காயமடைந்த 16 பேர் மதுரையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திங்கள்கிழமை நேரில் வருகை தந்தனர். முதலில் தீக்காயச் சிகிச்சைப் பிரிவுக்கு சென்ற அவர்கள், அங்கு காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டறிந்தார். பின்னர் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குரங்கணியில் மலையேறும் பயிற்சிக்காக 39 பேர் சென்றுள்ளனர். 3 பேர் மலையேறாமல் திரும்பிவிட்டனர். மீதம் பேர் 2 குழுக்களாக பிரிந்து மலையேறினர். மலையில் இருந்து இறங்கும் நேரத்தில் காட்டுத் தீ பரவியதில் 10 பேர் அதில் சிக்கி இறந்துவிட்டனர். 10 பேர் லேசான காயமடைந்து சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பிவிட்டனர். பலத்த காயமடைந்த 16 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோடை காலத்தில் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகளால் மலையேறுபவர்களுக்கு ஆபத்து ஏற்படும். மேலும், இலைகள் காய்ந்து சருகுகள் மூலம் காட்டுத்தீ பரவும் ஆபத்தும் உள்ளதால் பொதுவாக கோடையில் மலையேற்றத்துக்கு அனுமதிப்பது இல்லை. இவர்கள் மலையேற்றத்துக்கு அனுமதியின்றி சென்றுள்ளனர். முறைப்படி அனுமதி வாங்கியிருந்தால் அதிகாரிகளின் உரிய பாதுகாப்புடன் சென்று வந்திருக்கலாம் என்றார் முதல்வர்.
வனத்துறையினரின் அனுமதி பெற்றுத்தான் சென்றார்கள் என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்கும்போது, 'குரங்கணி மலையேற்றத்துக்கு இரண்டு வழிகள் உண்டு. குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேசன் வரை அனுமதி உண்டு. குரங்கணியில் இருந்து கொழுக்குமலை செல்ல அனுமதி இல்லை. இதில் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். தகவல் கிடைத்தவுடன் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மருத்துவர் குழு மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் குரங்கணியில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு போடி, தேனி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது' என்றார் அவர்.
பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து அவர்கள் ஆறுதல் கூறினர்.
அப்போது அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.